இந்த தேசத்தில் மனித தெய்வங்கள் அதிகம். அதிலும் சமீப காலங்களில் நான் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் மனித தெய்வங்களை நாம் மேலும் அதிகமாகப் பார்க்க முடிகிறது. திருவள்ளுவர் மழித்தலும், நீட்டலும் வேண்டா என்றார். அது முக்கியமல்ல என்பது அவர் கருத்து. ஆனால் பார்க்க மற்ற மனிதர்களைப் போலவே தோற்றம் இருந்தால் அவர்கள் வந்து வணங்குவார்களா? எனவே மழித்தல், நீட்டல், ஆசிரமம் வைத்தல், மேஜிக் காட்டுதல், கூட்டம் சேர்த்தல் என்று பல வழிகளிலும் முயன்று கோடிக்கணக்கில் இந்த தெய்வங்கள் காசு பார்க்கின்றன. புகழ் தேடுகின்றன.
அடுத்ததாக மகான்கள். கடவுள் என்று சொல்லிக் கொள்வது "ரொம்பவும் ஓவர்" என்று தீர்மானித்து அதற்கு அடுத்த நிலையை ஏற்படுத்திக் கொண்ட கூட்டம் இது. இவர்கள் பல சித்திகள், மகாசக்திகள் தங்களுக்கு இருப்பதாக பிரகடனப்படுத்திக் கொண்டு மேலே சொன்ன தெய்வங்களைப் போலவே தாங்களும் 'உழைத்து' கோடிக் கணக்கில் செல்வம் சேர்க்கின்றன.
ஆனால் உண்மையான மகான்கள் பெரும்பாலும் நம் கவனத்திற்கு வராமலேயே இருக்கிறார்கள். மற்றவர் வணக்கம், புகழ், பணம் என எதுவும் அவர்களுக்குத் தேவையில்லாததால் அவர்கள் எந்த பிரகடனமும் செய்வதில்லை. நம்முடைய அங்கீகாரமோ, அலட்சியமோ அவர்களைப் பாதிப்பதில்லை. தங்களுடைய ஞானத்தை வஞ்சனையின்றி மக்களுக்கு வழங்கிய வண்ணம் வாழும் அவர்கள் எந்த பிரதிபலனையும் எவரிடத்தும் எதிர்பார்ப்பதில்லை.
போலிகளையே அதிகம் கண்டு பழக்கப்பட்ட நமக்கு உண்மை எப்படியிருக்கும் என்பதற்கு அடையாளம் காட்ட ரமண மகரிஷி இருந்திருக்கிறார்.
இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியேயும் பிரபலமாக இருந்தாலும் துளியும் கர்வமில்லாது, சலனப்படாமல் ஜீவன்முக்தனாக வாழ்ந்து மறைந்த ரமண மகரிஷி அப்படிப்பட்ட ஞானி. தன்னிடம் மேலான சக்திகள் இருப்பதாக எப்போதும் அவர் காட்டிக் கொண்டதில்லை. யாரையும் விட தான் உயர்ந்தவன் என்பதை சூசகமாகக் கூட அவர் தெரிவித்ததில்லை.
திருச்சுழியில் வெங்கடரமணனாகப் பிறந்த ரமண மகரிஷி ஆன்மீகத் தேடலில் திருவண்ணாமலைக்கு இளம் வயதிலேயே வந்து விட்டார். ஆரம்பத்தில் இருந்தே அதிகம் பேசாமல் மோன நிலையில் அமர்ந்திருக்கும் ரமணர் பால் ஈர்க்கப்பட்ட சிலர் அவரிடம் திரும்பத் திரும்ப வர ஆரம்பித்தார்கள். அவருடைய ஞான சக்தி சிறிது சிறிதாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பலரையும் வர வைத்தது. ·ப்ராங்க் ஹம்ப்ரீஸ் (Frank H.Humphreys) என்ற ஆங்கிலேயர் வந்து ரமண மகரிஷியால் வசீகரிக்கப்பட்டு, ரமணாசிரமத்தில் சில நாட்கள் தங்கி மகரிஷியிடம் உபதேசம் பெற்று அதை எழுதி லண்டனில் வசிக்கும் தன் நண்பனுக்கு அனுப்ப அவர் அதை The International Psychic Gazetteல் 1911ஆம் ஆண்டு பிரசுரித்தார். சிறிது சிறிதாக அவர் புகழ் மேலை நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. வெளிநாட்டிலிருந்தும் அவரைத் தரிசிக்க பலர் வர ஆரம்பித்தனர்.
ஒரு முறை ரமண மகரிஷி மரத்தடியில் அமர்ந்து சந்திக்க வந்தவர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். அவரைத் தரிசிக்க வந்த ஒரு வெளிநாட்டு அன்பர் காலை மடித்து நம்மைப் போல் கீழே உட்கார முடியாததால் வேகமாகச் சென்று வெளியே போட்டிருந்த ஒரு நாற்காலியை எடுத்துக் கொண்டு வந்து அதில் உட்கார்ந்து கொண்டார். ரமணரை விட உயரமான இடத்தில் அவர் அமர்வது ஆசிரம நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அந்த மனிதரிடம் ஏதோ சொல்ல அவர் வெளியேறி விட்டார்.
இதைக் கவனித்த ரமணர் என்ன என்று விசாரிக்க அவர்கள் "உங்களை விட உயரமான இடத்தில் உட்கார வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம்" என்று சொல்ல ரமணர் மரத்தில் அமர்ந்திருந்த ஒரு குரங்கைக் காண்பித்து "இதுவும் என்னை விட உயரத்துல தானே இருக்கு.. இதை என்ன செய்யப் போறீங்க?" என்று வேடிக்கையாகக் கேட்டு "இதில் உயர்வென்ன, தாழ்வென்ன" என்று சொன்னார்.
தன்னை அவர் என்றுமே உயர்த்திக் கொண்டதில்லை. தன்னை முன்னிலைப் படுத்த அவர் முயன்றதுமில்லை. ஒரு முறை அவர் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட நினைத்த அன்பர்கள் அவரிடம் அனுமதி கேட்டனர். "பிறந்த நாள் தெரிந்தால் தானே கொண்டாடறதுக்கு" என்று ரமணர் மறுத்து விட திருச்சுழியில் அவர் பிறந்த நாளை அவர்கள் கண்டு பிடித்துக் கேட்டனர். ரமணர் சிரித்தபடி சொன்னார். "இது இந்தப் பிறவி. முதல் பிறவி எப்ப ஆரம்பிச்சது என்று தெரிந்து கொண்டாடுவது தானே நியாயம். அது தானே உண்மையான பிறந்த நாள்"
சமையலுக்காக காய்கறிகளை சுத்தம் செய்து அரிந்து தருவது, பக்தர்களின் ஆன்மீகப் படைப்புகளைப் பிழை திருத்துவது என்று எந்த வேலையானாலும் உயர்வு தாழ்வு பார்க்காமல் செய்யக் கூடியவராக ரமணர் விளங்கினார். வெளிப்புற தோற்றத்தில் மற்றவர்களை விடப் பெரிய வித்தியாசம் இல்லா விட்டாலும் அவர் கண்களில் ஞான தீட்சண்யமும், அவரைச் சுற்றி சக்தி அலைகளும் இருந்ததாக சந்தித்தவர்கள் கூறுகிறார்கள்.
பல சமயங்களில் அவரைக் காண வந்தவர்கள் தங்கள் கேள்விகளுக்கான பதில்களை அவரிடம் கேட்காமலேயே அவர் முன்னிலையில் விடைகளை உணர்ந்தனர். எண்ண அலைகளாலேயே அவற்றைப் பெற முடிந்தவர்களுக்கு பதிலளிக்கும் சக்தி அவருக்கு இருந்ததாக உள்நாட்டு வெளிநாட்டு அன்பர்கள் கூறுகின்றனர். இதை பால் பிரண்டன் (Paul Brunton) என்ற மேலை நாட்டு தத்துவஞானியும் ரமணரிடம் தன் அனுபவமாக ஒரு நூலில் (A search in secret India) எழுதினார்.
அந்த நூலில் ரமண மகரிஷியின் பக்தர்களுள் ஒருவரான யோகி ராமையா என்பவருடன் தனக்கேற்பட்ட அனுபவத்தையும் பால் பிரண்டன் குறிப்பிட்டுள்ளார். கொடிய விஷம் கொண்ட பெரிய பாம்பு ஒன்று பால் பிரண்டன் அறையில் வந்து விட பலரும் அதை அடிக்க கம்புகளை எடுக்க விரைந்த போது ராமையா அவர்களைத் தடுத்து நிறுத்தி அந்த பாம்பை தன் கைகளால் மெல்ல எடுத்து அதைத் தடவிக் கொடுக்க அதுவும் சீற்றத்தை அடக்கி சாந்தமாகி விட ராமையா அதைக் கீழே இறக்கி விட்டதாகவும், அந்த பாம்பு அங்கிருந்து யாருக்கும் எந்தத் தொந்திரவும் செய்யாமல் போய் விட்டதாகவும் பால் பிரண்டன் குறிப்பிடுகிறார்.
பால் பிரண்டன் பிறகு பயமாக இருக்கவில்லையா என்று ராமையாவிடம் கேட்டாராம். நான் அதை அன்புடன் அணுகுகையில் அது என்னை ஏன் துன்புறுத்தப் போகிறது என்று ராமையா சொன்னாராம். அந்த அளவு பண்பட்ட யோகிகளும், ஞானிகளும் கூட ரமணரின் பக்தர்களாக இருந்தார்கள் என்றால் ரமணரைப் பற்றி இனி என்ன சொல்ல?
அவருடைய இறுதிக் காலத்தில் இடது தோளில் கட்டி ஒன்று வந்து பெரிதாகத் தொடங்கியது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னும் அது குணமாகவில்லை. அதையும் கூட மகரிஷி பற்றில்லாமல் கவனிக்கலானார். மற்றவர்கள் துக்கப்பட்டபோது தான் அந்த உடல் அல்ல என்றும், உடல் அதன் இயற்கையான முடிவுக்கு வருவதில் வருந்த ஒன்றுமில்லை என்றும் புன்னகையுடன் கூறினார். சிலர் மகரிஷி தன் தவசக்தியால் அதைக் குணப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதும், சிலர் தங்களுக்கே அந்த சக்தி உள்ளது என்று மகரிஷியைக் குணப்படுத்த முயன்ற போதும் அவர்களைப் புன்னகையோடு பார்த்தாரே தவிர வேறொன்றும் செய்யவில்லை. கீதையில் கிருஷ்ணர் சொன்ன ஸ்திதப்ரக்ஞனும், குணாதீனனும் இவரல்லவோ.
ரமண மகரிஷியின் அருளுரைகளில் சில -
* ஒவ்வொரு எண்ணத்தையும் அதன் மூலத்திற்கே கொண்டு செல்லுங்கள். எண்ணங்கள் மேன்மேலும் ஓட அனுமதிக்காதீர்கள். அவ்வாறு செய்தால் அதற்கு முடிவே இல்லை. மறுபடியும் மறுபடியும் உற்பத்தி ஸ்தானத்திற்கே அழைத்துச் சென்றால் மனம் செயலற்று இறந்து போகும்.
* சித்திகள் உண்மையான ஞானத்தின் அடையாளமல்ல. சமத்துவமே உண்மையான ஞானத்தின் அடையாளம். சமத்துவம் என்பது வேறுபாடுகளை மறுப்பதன்று. மாறாக ஒன்று படும் ஏகத்துவத்தை உணர்தல்.
* மூலமாம் இதயத்தில் அகந்தை கரைதலே உண்மையான சரணாகதி. வெளிச்செயல்களால் கடவுளை ஏமாற்ற முடியாது. அவர் பார்ப்பதெல்லாம் இன்னும் எவ்வளவு அகந்தை பலமாக எஞ்சி நிற்கிறது என்பதும், எவ்வளவு அழியும் நிலையிலிருக்கிறது என்பதும் தான்.
* ஆத்மஞானத்தையே நான் வலியுறுத்துகிறேன். நம்மை அறிந்த பின்னரே உலகையும் கடவுளையும் அறிதல் வேண்டும்.... ஆத்மாவைத் தேடி ஆழ்ந்துசெல்லச் செல்ல உண்மை ஆத்மா உங்களை உள்ளிழுக்கக் காத்திருக்கிறது. பின் செய்ய வேண்டியவற்றை எல்லாம் வேறு ஏதோ ஒன்று செய்கிறது. உங்களுக்கு அதில் பங்கு இல்லை.
நன்றி: விகடன்
Sunday, March 7, 2010
உண்மையான மகான் எப்படி இருப்பார்?
Posted by Sharan R at 10:44 AM 0 comments
இறைவன் எந்த மதத்தவன்?
இறைவன் இருக்கிறான் என்பதை நம்பாதவர்கள் கூட மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். கோடானு கோடி உயிர்கள், உலகங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாம் நம் கற்பனைக்கும் எட்டாத அண்டவெளியில் துல்லியமாக இயங்கிக் கொண்டிருக்கிறன என்பதைப் பார்க்கும் போது அதை இயக்குகின்ற ஒரு மாபெரும் சக்தி இருக்கத்தான் வேண்டும் என்பதை நாத்திகர்களாலும் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
இன்று அந்த இறைவனைத் தங்கள் மதத்தவராக பல மதத்தவரும் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அவன் பெயரால் தர்மங்களும் நடக்கின்றன. அதர்மங்களும் நடக்கின்றன. இறைவனின் பெயரால் யுத்தங்களும், சண்டைகளும் சர்வசகஜமாக நடப்பதை வரலாறு பதிவு செய்கிறது. கடவுளின் பெயரால் மனிதர்கள் என்னென்னவோ செய்கிறார்கள். செத்து மடிகிறார்கள்.
உண்மையில் இறைவனுக்கு என்று ஒரு மதம் இருக்கிறதா? இருந்தால் இறைவன் எந்த மதத்தவன்? பல மதங்கள் தங்களுடையவன் என்று உரிமை கொண்டாடுகின்றனவே, உண்மையில் பல மதக் கடவுள்கள் இருக்கின்றனரா?
பல மதக் கடவுள்கள் இருந்திருந்தால் இந்த உலகில் இன்று நடைபெறும் மதச்சண்டைகள் போல கடவுள்களுக்கும் யார் சிறந்தவன் என்ற போட்டி ஏற்பட்டு இருக்கும். அண்ட சராசரங்கள் ஸ்தம்பித்துப் போய் இருக்கும். அது இது வரை நிகழவில்லை, பிரபஞ்சம் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதால் பல மதக் கடவுள்கள் இருக்க வாய்ப்பேயில்லை. எனவே இறைவன் ஒருவனாக அல்லது ஒரே சக்தியாகத் தான் இருக்க முடியும் என்று சுலபமாகக் கணிக்க முடிகிறது.
இருப்பது ஒரு இறைவன் என்றால் அவன் ஒரு மதத்தவனாக இருக்க முடியுமா? அப்படி ஒரு மதத்தவனாக இறைவன் இருந்திருந்தால் அந்த குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஓஹோ என்று சுபிட்சமாகவும், சகல சௌபாக்கியங்களுடனும் இருக்க மற்ற மதத்தினர் எல்லாம் கீழான நிலைகளிலும், சொல்லொணா கஷ்டங்களுடன் இருக்க வேண்டும். அது தான் லாஜிக்காகத் தெரிகிறது. ஆனால் இன்றைய உலகில் எல்லா மதத்திலும் சுபிட்சமாக உள்ளவர்களும் இருக்கிறார்கள், எதிர்மாறாக மிகவும் கஷ்டப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது இறைவன் ஒரு மதத்தைச் சார்ந்தவன் என்ற நிலைபாடும் அடிபட்டுப் போகிறது.
இருப்பது ஒரு இறைவன், நாமெல்லாரும் அவன் சிருஷ்டிகள் என்றால் மதம் என்ற பெயரிலும், தங்கள் கடவுள் என்ற பெயரிலும் மனிதர்கள் சண்டை போடுவது எதற்காக?
Posted by Sharan R at 10:38 AM 0 comments
ஆன்மீகச் சந்தை ஒரு முன்னுரை – டாக்டர்.ருத்ரன் !
குருநாதர்கள் ! பாகம் – 1 – முடிவறம்
அவர்கள் ஏற்கெனவே ஏகப்பட்ட பேர். இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போதெல்லாம் அவர்கள் திக்குத்தெரியாக் காடுகளில் கண்காணாத ஒரு மூலையில் ஒதுங்கியிருப்பதில்லை. அவர்களுடைய வாசஸ்தலம் குகைப்பொந்துகளும் இல்லை. மலை உச்சிகளும் இல்லை. ஊடகங்கள் அனைத்திலும் அவர்கள் வாசம் செய்கிறார்கள். அவர்களைத் தேடிப்போக நீங்கள் விரும்பாவிட்டாலும் அவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள். ஆம். ஆன்மீகச் சந்தை முன்னெப்போதும் இத்தனை சூடாக இருந்ததே இல்லை.
இந்தியா என்றழைக்கப்படும் உலகமயமாக்கப்பட்ட புதிய வணிகமாயையில் இந்தக் கில்லாடி குருநாதர்கள் ஒரு வளமான சந்தையைக் கண்டுகொண்டார்கள். விற்பனைக்கான சரக்கு அவர்களிடம் தயாராக இருக்கிறது. அதற்கேற்ப தேவையையும் அவர்களே உருவாக்கி விடுகிறார்கள். இத்தகையதொரு குருநாதரை உற்பத்தி செய்வதற்கான செலவும், அவர்களைச் சந்தைப்படுத்துவதற்கான செலவும் ஆன்மீக வாடிக்கையாளர்களின் பில்லில் சேர்க்கப்பட்டுவிடும். அதனாலென்ன, குருநாதர்களின் வியாபாரம் சக்கை போடு போடுகிறது. இந்த வியாபாரத்திற்கு ஆன்மீகத் தணிக்கையும் கிடையாது. லவுகீகத் தணிக்கையும் கிடையாது. வாடிக்கையாளர் கூட்டமோ அதிகரித்தபடியே இருக்கிறது.
முன்னொரு காலத்தில் இந்த ஆன்மீகப் பச்சடியின் ருசிகனாக இருந்தவன் என்ற முறையிலும், “இந்த ஆன்மீகச் சந்தையில் நாமும் குதித்தாலென்ன” என்று இதனைக் கூர்ந்து கவனித்த பொறாமையும் கூச்சமும் கொண்ட தொழில்முனைவன் என்ற முறையிலும் இந்த ஆட்டத்தை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். முழுமையாக கவனித்து வருகிறேன் என்றும் சொல்ல்லாம். ஆன்மீக வியாபாரத்தில் நுழைவது என்ற இந்தச் சவாலுக்குள் நுழையவிடாமல் என்னைத் தடுத்த்து வேறெதுவும் இல்லை. என்னுடைய இயல்புதான். இயல்பு என்றால், சுயமரியாதை குறித்துத் தெளிவு கொண்ட என் இயல்பு. கண்ணாடியில் முகம் பார்த்து வெட்கப்பட நேரும் அபாயம் குறித்து அஞ்சும் என் இயல்பு. ஆக, இந்தத் தொழிலில் குதிக்கவொட்டாமல் என் இயல்பே என்னைத் தடுத்துவிட்டது. அந்த வயிற்றெரிச்சல் காரணமாகத்தான் இதை எழுதுகிறாயா என்று கேட்கிறீர்களா, இருக்கலாம்.
இன்றைக்கு இந்தத் தொழிலில் முன்னணியாக இருக்கும் குருநாதர்களுக்கு முகத்தில் எவ்வளவு முடி இருக்கிறதோ, அதற்கு மயிரளவும் குறையாமல் எனக்கும் முகம் நிறைய முடி இருக்கிறது. எனவே இந்தத் தகுதியைப் பொறுத்தவரை நான் தேர்வில் நான் பாஸ் ஆகி விட்டேன். ஆனால் குருநாதர் ஆவதும், குருநாதராகத் தொடர்ந்து நீடிப்பதும் வெறும் முடிவறம் அல்லவே.! (முடிவறம் என்ற சொல்லின் பொருள் என்ன என்று திகைககிறீர்களோ! குருநாதர்களைக் கூர்ந்து கவனித்து வந்த ஆதி நாட்களில் நான் கற்றுக்கொண்ட தந்திரங்களில் இதுவும் ஒன்று. அன்றாட வாழ்வின் உப்புச் சப்பில்லாத விசயங்களைப் பற்றிப் பேசும்போது, புரியாத மொழியில் புதிரான சொற்களைப் பயன்படுத்த வேண்டும். அதனால்தான் வெறும் முடி சமாச்சாரம் என்று சொல்லியிருக்க வேண்டிய அற்ப விசயத்தை முடிவறம் என்று குறிப்பிடுகிறேன்.)
இந்தத் தொழிலில் இறங்குவது குறித்து நான் தீவிரமாக யோசித்து வந்தேன் என்ற காரணத்தினால், சந்தையில் விற்பனையாகும் குருநாதர்களைப் பல ரகங்களாக வகைப்படுத்தியிருக்கிறேன். முதலாவதாக இத்தகைய குருநாதர்களை பேசுபவர்கள், பேசாதவர்கள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். முடி விசயத்தைப் பொருத்தவரை அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். வளர்கிறதா, நல்லது. வளர மறுக்கிறதா, பரவாயில்லை. மழுங்கச் சிரைத்து விடலாம். முகத்தை மட்டுமல்ல, தலையையும். உங்கள் தலையை நீங்கள் மொட்டையடித்துக் கொள்கிறீர்கள், அடுத்தவன் தலையை மொட்டையடிக்கவில்லையே!
பேசும் குருநாதர்களைக் காப்பி அடிப்பது கொஞ்சம் கஷ்டமான காரியம். இந்த ரகத்தைச் சேர்ந்த குருநாதர்கள் ‘சுட்டு’ பேசுவதற்கு உதவியாக ரஜனீஷின் சரக்குகள் போதுமான அளவு இருக்கின்றன என்ற போதிலும், அதிகம் பிரபலமாகாத ஏதாவது சில மத இலக்கியங்களின் பெயர்களையாவது இத்தகைய குருநாதர்கள் தொடர்ச்சியாகப் படித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தங்களது ஞானோபதேசத்தைத் தடையின்றித் தொடர்ந்து வழங்க இது அவசியம். இது கொஞ்சம் சிக்கலான ஆட்டம்தான். இதில் கொடி நாட்ட வேண்டுமானால் முடி மட்டும் போதாது. மொழி ஆளுமையும் பேச்சுத் திறனும் வேண்டும்.
பேசாக் குருநாதர் ஆவதற்கும் சில சிறப்புத் திறன்கள் தேவைப்படுகின்றன. கருத்தை வரவழைக்கும் கலையைக் கற்றுத் தேர்வதைக் காட்டிலும் பொருளை வரவழைக்கும் கலை எளிதில் கைவரக் கூடியதுதான். ஆனால் தங்க நகை போன்றவற்றை வரவழைக்க வேண்டுமானால் அது கொஞ்சம் சிரமம்தான். நகை சப்ளையை ரகசியமாக வைத்திருப்பதற்கு நீண்ட கால வணிக ஒப்பந்தங்கள் தேவைப்படும். அதற்கு பேரம்பேசும் திறனும் ரகசியம் குலையாத கட்டுக் கோப்பான அமைப்பைப் பராமரிக்கும் திறனும் வேண்டும். வி.ஐ.பி வாடிக்கையாளர்கள் வரும்போது வெறும் சாம்பலை மட்டும் கொடுத்து அனுப்ப முடியுமா? பகுத்தறிவாளர் என்று கூறப்படுபவரும் தன்னை நாத்திகன் என்று கூறிக்கொள்பவருமான ஒரு பிரமுகரின் வீட்டில் நடந்ததைப் போல, மூன்று பேருக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்ததோடு மோதிர சப்ளை நின்று போகலாம். நாலாவது மோதிரத்தை எடு என்று இன்னொரு வி.ஐ.பி வந்து கழுத்தறுக்கலாம்.
நீங்கள் பேசாக் குருநாதர் வகையைச் சேர்ந்தவராக இருந்து, பொருளை வரவழைக்கும் கலையும் கைவராதவராக இருந்தால், பிரமித்து நிற்கும் பக்தர்களை நீங்கள் கட்டிப்பிடிக்கலாம், முத்தமிடலாம், காறித்துப்பலாம், உதைக்கலாம், உருளலாம். இந்த ஆட்டத்துக்கு விதியே கிடையாது. எல்லாம் செல்லுபடியாகும்.
குருநாதர்கள் என்றாலே ஆன்மீகக் கடத்திகள்தான். எனவே வாடிக்கையாளர்களுக்கு வாக்குறுதி வேண்டும். நீங்கள் ஜென் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் முற்பிறவி மற்றும் வரும் பிறவிகள் குறித்துக் கோடி காட்டும் வகையில்தான் நீங்கள் பேசவேண்டும். நேற்றுவரை வெளித்தெரியாத, இன்று பிரத்தியட்சமாகிவிட்ட கடவுள் என்று உங்களுக்கு நீங்களே பட்டம் சூட்டிக்கொள்ளப் பொருத்தமான தருணம் வரும் வரையிலும், வேறுவழியில்லை – குரு என்ற பட்டத்துடன் நீங்கள் நிறைவடையத்தான் வேண்டும். ஆனால் காத்திருத்தில் வீணாகிவிடுவதில்லை. உங்களுடைய சந்தைப்படுத்தும் திறன், ஆள் பிடிக்கும் திறன் ஆகியவற்றைப் பொருத்து ஓரிரு ஆண்டுகளில் கடவுளாகி விடலாம்.
முட்டாள்கள் மட்டுமே இந்த வியாபாரத்தின் வாடிக்கையாளர்கள் என்ற போதிலும், நாம் இதனை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க முடியாது. ஏனென்றால் இது வெறும் முடி சமாச்சாரம் இல்லையே!
இந்த இடுகையை Friday, March 6, 2009, 10:34 அன்று டாக்டர்.ருத்ரன் www.vinavu.com எழுதினார்.
Posted by Sharan R at 10:27 AM 0 comments
வைரமுத்துவின் வைர வரிகள்...
எழுந்திருஎன் பின்னால் வா
அதோ பார்
அபாயம் அறிந்தால்அங்குல புழுமில்லிமீடறாய்சுருள்கிறதே ! ஏன் ?
பறவையாய் இருந்தும்பறக்காத கோழிபருந்து கண்டதும்பரந்தடிகிறதே ! ஏன் ?
வலை அறுந்து நிலை குலைதும்அந்த ஒரு இழை சிலந்திஉசலாடுகிறதே ! ஏன் ?
வாழ்கைஇன்நிமிஷ நீடிப்புகுத்தான்
தம்பி ! ! !
சாவைசாவு தீர்மானிக்கட்டும்
வாழ்வைநீ தீர்மானி
புரிந்துகொள்
சுடும் வரைநெருப்பு
சுற்றும் வரைபூமி
போராடும் வரைமனிதன்
நீ மனிதன் ! ! !
Posted by Sharan R at 3:59 AM 0 comments
Labels: வைரமுத்து
Friday, March 5, 2010
கண்களைப் பேணும் காய்கறிகள்
நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.
அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.
வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.
உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.
Posted by Sharan R at 1:46 AM 0 comments
Labels: காய்கறிகள். கண்கள்